News Article

சேதமடைந்த சங்குப்பிட்டி பாலம்: அவசர திருத்தப் பணிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

கிளிநொச்சி - கேரதீவு - சங்குப்பிட்டி பாலம் சேதமடைந்த நிலையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளதால் நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு இப்பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. திருத்தப் பணிகள் தொடர்பில் இன்று (18.10.2024) குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் சிற்றூர்தி சேவையில் பயணிக்கும் பயணிகள் மாத்திரம் வாகனப் பயணத்தில் ஈடுபட்டு, குறிப்பிட்ட சில இடங்களில் இறங்கி, நடந்து செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பாலத்தினூடாக வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நோயாளர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கனகர வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் மாற்றுப் பாதையினை பயன்படுத்துமாறும், பாதைக்கான திருத்த வேலைகள் விரைவாக பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் குறித்த தினத்துக்கு முன்னர் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் அறிவித்துள்ளார்.

Leave a Comment