News Article

கனடா செல்லவிருந்த இளைஞன் மர்ம மரணம்; நீதிகேட்டு விதிக்கு இறங்கிய மக்கள்

முல்லைத்தீவு மல்லாவி இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவி பகுதியில் பொதுமக்கள் ,பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து பாரிய அளவிலான கவனயீர்ப்பு போராட்டம் இன்று (16) முன்னெடுக்கப்பட்டிருந்தது. கனடா செல்ல தயாரான மல்லாவி யோகபுரம் பகுதியினைச் சேர்ந்த ஆனந்தராசன் சஜீவன் என்ற இளைஞன் க்டந்த ஜூலை 30 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். 19 நாட்களாகியும் குறித்த இளைஞனின் மரணத்திற்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் , பொலிஸாரின் விசாரணைகள் மந்தகதியில் நடப்பதாக கூறியும் போராட்டம் முன்னேடுக்கப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கூறியே பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கபப்ட்டது.மல்லாவி மத்திய பஸ் நிலையத்தில் ஆரம்பமாகிய பேரணி மல்லாவி போலிஸ் நிலையம் வரை சென்றிருந்தது. குறித்த போராட்த்திற்கு ஆதரவாக இன்றைய தினம் மல்லாவி பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டகாரர்கள் மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பு ஒன்று கூடி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்த மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இளைஞனின் படுகொலைக்கான நீதியினை தான் பெற்று தருவதாகவும் தெரிவித்திருந்தார்.குறித்த காலப்பகுதிக்குள் துரித கதியில் விசாரணைகள் முன்னெடுக்கபடாவிடின், தாம் மேற்கொள்வோம் என்றும், சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினையும் தாம் முன்னெடுப்போம் என்றும் எச்சரித்து,பொலிஸ் பொறுப்பதிகாரியிடமும்,வருகை தந்திருந்த பாராளுமன்ற அரசியல் பிரமுகர்களிடமும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Comment